உரையாடல்

செலவாகாத நாணயங்கள் போல மனம் முழுவதும் சேர்ந்து இருக்கும் நினைவுகளின் ஊடே பயணிக்கும் இந்நொடியில் நினைவுகளின் தொடக்கம் எதுவாய் இருக்கும்? என யோசித்து முடிக்கிறேன்.

புலப்படாத அதன் முதல் முடிச்சை தேடி அலைவது ஓர் ஆனந்தமயமான அனுபவத்தை நெஞ்சம் முழுதும் நிறைகிறது.

காகம் கவர்ந்து செல்லும் வடையைப் போலே ஓரிடம் துவங்கி வேறிடம் நோக்கி அது பயணிக்கும் வேகத்தில் நினைவுக் குமிழ்கள் மனவானில் மிதந்து ஊர்கின்றன.

இறுதியில் தொடங்கிய இடம் தேடி சேர்கையில் அங்கே நினைவுகளின் மிச்சம் காற்றில் கரையும் கற்பூரமாய் தீற்றல்கள் மட்டும் மீதமிருப்பதாய் உணர முடிகிறது.

“நினைந்து ,நினைந்து உணர்ந்து, உணர்ந்து நெகிழ்ந்து ,நெகிழ்ந்து ,அன்பே நிறைந்து ,நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து, நனைந்து” என்ற ஞானசரியை பாடலும் அந்த நினைவுகளோடு உரையாடிச் செல்வதை வேடிக்கை மட்டுமே பார்க்கிறேன்.

இந்த அனுபவங்கள் தான் வாழ்க்கை எனில் உண்மையான வாழ்வு? எது என்ற கேள்வியின் கீற்றும் மெல்ல இவ்விரவில் முளைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Message Us on WhatsApp